Thursday, 27 December 2012
அப்பா
Thursday, 19 January 2012
அம்மா
பிரசாத் வெள்ளிகிழமை மாலை ஐந்து மணிக்கெல்லாம் டிரஸ் எடுத்து வைத்துக்கொண்டு தயாராகி விட்டான். சனிக்கிழமைக்கு ஒன்று. ஞாயிற்றுக்கிழமைக்கு ஒன்று என்று தனக்குள் சொல்லி கொண்டான். அம்மா ஆபிசில் இருந்து வந்த உடனே சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும்.மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே விடுமுறை. அப்போதெல்லாம் தவறாமல் அவன் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். இந்த முறை செல்வதும் எப்பவும் போல் சந்தோஷமாக இருந்தது. வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் போய் உட்கார்ந்தான். 24 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது. அவன் வீட்டில் அவன்தான் முதலில் வருவான். ஐந்தேகாலுக்கு அம்மா வருவாள். அப்பா வருவதைச் சொல்லவே முடியாது. சில சமயம் மதியமே லீவ் போட்டு வந்து படுத்துக்கொள்வார். சில சமயங்களில் இரவு பத்து பதினொன்று கூட ஆகும். மணி இப்போ அஞ்சு அஞ்சு. இன்னும் அம்மா வர பத்து நிமிஷங்கள் உள்ளன. பத்து நிமிஷங்கள். பத்தாம் வாய்ப்பாடு எவ்ளோ ஈசி என்று அவனுக்கு தோன்றியது. பதினஞ்சு கூட பரவாயில்லை. இந்த பதிமூணு பதினேழு எல்லாம்தான் எவ்ளோ மனப்பாடம் செஞ்சாலும் மனசுல நிக்கறது இல்ல. இன்னொரு முறை மணி பார்த்தான். இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு.
சாதாரணமாக ஸ்கூல் விட்டு வந்ததும் வீடு பூட்டிவிட்டு வாசலில் விளையாட போய் விடுவான். ஹரி, கோபி எல்லாம் அவனுக்கு பிரண்ட்ஸ். மதன், வசந்த் கூட எல்லாம் சேர வேண்டாம் என்று அம்மா சொல்லி இருந்தாள். கோபி அம்மா ஸ்கூல் டீச்சர். அதுவும் அவன் படிக்கற ஸ்கூலிலேயே. நல்ல வேளை பிரசாத்திற்கு அவர்கள் பாடம் எதுவும் எடுக்கவில்லை. ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர் என்று கேள்விப்பட்டு இருக்கிறான். கோபி அப்பா கூட அவருக்கு பயப்படுவார் என்று அம்மா சிரித்துக்கொண்டே சொல்லுவாள். அப்பா போய் எங்கயாவது பயப்படுவாளா? இன்னும் கொஞ்ச நேரத்துல சன் முழுக்க செட் ஆயிடும். சூரிய வெளிச்சம் பூமியை வந்து சேர்வதற்கு எட்டு நிமிடங்கள் ஆகும் என்று அவனுக்கு ஞாபகம் வந்தது. இந்த விஷயம் எல்லாம் எவ்ளோ பேருக்கு தெரியும். சேகருக்குக் கூட தெரியாது. இத்தனைக்கும் அவன்தான் கிளாஸ்லேயே பணக்காரன்.
தூரத்தில் அம்மா நடந்து வருவது பார்த்து ஓடினான். பக்கத்தில் போய் கையைப் பிடித்துக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டு கன்னத்தைக் கிள்ளினாள். உள்ளே வந்தவுடன் “பாட்டி வீட்டுக்குக் கிளம்பறேன் மா” என்றான். “அதுக்குள்ளேயேவா? இருட்டிண்டு இருக்கே நாளைக்கு போகலாம்” என்றாள். “போ..இப்பவே போவேன்” என்றான். 24a பிடித்தால் கடைசி நிறுத்தம் வெஸ்ட் பஸ் டிப்போ. அங்கிருந்து பக்கத்து தெரு ஓரமாக நடந்தால் மூணாவது திருப்பத்தில் பாட்டி வீடு. அவன் நிறைய முறை போய் இருக்கிறான். “அப்பா என்ன சொல்லுவா மா?” என்றான். “ஒண்ணும் சொல்ல மாட்டார் நான் பாத்துக்கறேன், ஆனா ஞாயித்துகிழம சீக்ரம் வந்துடனும் என்ன?” “ஓகே மா” என்று பையை எடுத்துக்கொண்டு செருப்பு போட்டுக்கொண்டு ஓடினான். பிறகு எதோ தோன்றியவன் போல் திரும்பி வந்து “அப்போ அப்பா திட்டினா” என்றான்.”நான் பாத்துக்கறேன் போடா” என்றாள் அம்மா.
பாட்டி வீடு பக்கத்தில் சரவணணும் மணியும்தான் அவனுக்கு க்ளோஸ் பிரண்ட்ஸ்.ரெண்டு பேர் கிட்டயும் வீடியோ கேம் இருக்கு. ஆனா மணிதான் கஞ்சன். பிரசாத்திற்கு விளையாடத் தரவே மாட்டான். அவன் போனபோது பாட்டி ஸ்ரீராமஜெயம் எழுதி கொண்டு இருந்தாள். மாமா ஆபிசிலிருந்து வந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். பாட்டி உட்கார்ந்திருந்த இடத்திற்கு மேலே தாத்தா படம் மாட்டி மாலை போட்டிருந்துது. அந்த மலை வாடவே வாடாது என்று பாட்டி சொல்லி இருக்கிறாள். போனவுடன் பாட்டி மடியில் படுத்துக்கொண்டான். பாட்டி தலையை கோதிக்கொண்டே “அம்மா ஆபீஸிலிருந்து வந்தாச்சா?” என்று கேட்டாள். “உங்க அப்பங்காரன்”. “ம்ம் ஹும்.. அவன் வெள்ளிகிழம என்னிக்கு நேரத்தோட வந்திருக்கான். என் பொண்ணு உசுர…” அதுக்குள்ளே மாமா “அம்மா” என்று கத்தினார். “விளக்கு வெச்சப்றம் இப்டி அழுது பிராணன் வாங்காதே. ஏற்கனவே தரித்தரம் தாண்டவம் ஆடறது.”
பிரசாத் உடனே புறப்பட்டு சரவணா வீட்டுக்கு போனான். சரவணா டென்னிஸ் கிளாஸ் கூட போறான். அவன் அப்பாவே கொண்டு விடுவார். அம்மா டாக்டர். அவன் வீடியோ கேம்தான் ஆட வந்திருக்கான் என்று சரவணனுக்கு தெரியும். ஆனா அவன் மாட்டுக்கு டிவி பாத்துண்டு இருக்கான். அவன் அம்மாவும்தான் ஆபிஸ் போறா. ஆனா இவன பாத்துக்கவே தனிய ஒரு ஆயா. ஆயா சாதத்துல கொழம்ப போட்டு கொழச்சு அவனுக்கு வாய்ல ஊட்டி விடறா. பிரசாத் தலையை திருப்பிக்கொண்டான். டிவில இங்கிலீஷ் படம் எதோ ஒண்ணு. நல்ல வேளை. சீக்ரம் முடிஞ்சிது. பிறகு வீடியோ கேம் செட் பண்ணி ஆடஆரம்பித்தனர்.
கார் ரேஸ் விளையாட்டு. சரவணனுக்கு நல்ல பழக்கம் இருந்ததால் அவனால் சீக்கிரமே ஜெயிக்க முடிந்தது. பிரசாதிற்க்கு அந்த இயக்குபிடியை சரிவர கையாள முடியவில்லை. ஆனால் அடுத்து வந்த செஸ் விளையாட்டில் பிரசாத் எளிதாக ஜெயித்தான். கொஞ்ச நேரம்தான் விளையாடின மாதிரி இருந்தது. அதுக்குள் பாட்டி குரல் கேட்டது. சாப்பிட்டு போய் விளையாடுடா என்றார் பாட்டி. பிரசாத்திற்கு கோவமாய் வந்தது. பாட்டி பக்கத்தில் போய் “ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்து தொலைக்கற?” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டான். ஆனால் பரவாயில்லை. சாப்பிட்டு வந்து கூட விளையாடலாம். பதினோரு மணி வரை வெளியில் இருக்கும் சுதந்திரம் இங்கு உண்டு. மாமாவும் ராத்திரி தூங்க நேரம் ஆகும். திரும்ப சரவணா வீட்டிற்குக் கூட வரலாம். அவன் அப்பா திட்டவே மாட்டார். அவர் வந்தா சரவணா அம்மா பயப்படறது இல்ல. அந்த அழுகிப்போன திராட்சை வாசனை வரது இல்ல. சாராயம் குடிச்சா அந்த வாசன வரும்னு அவனுக்குத் தெரியும். அதனாலதான் அவன் அப்பாகிட்ட அந்த வாசன எப்பவும் வரதும்னும் அவனுக்கும் தெரியும். ஆனா இத அவன் அம்மாகிட்ட கேக்கிறது இல்ல. கேட்டா அம்மா அழுவானும் அவனுக்கு தெரியும்.
சரவணா வீட்டிலிருந்து பாட்டி வீட்டிற்கு போக ஒரு சின்ன ரோடு நடக்க வேண்டும். அவன் வெளியில் வந்ததும் கரண்ட் போனது. உடனே ஹோவென கூச்சல் கேட்டது. அவன் நண்பர்கள்தான். அவனும் உடனே கத்தினான். ஒரே இருட்டாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் பார்க்கவும் முடிஞ்சது. மரத்துக்குக் கீழ இலை கருப்பு கருப்பா அசையறது. அவனுக்கு முன்னாடி பாட்டியோட நிழல். பக்கத்துல அவனோட நிழல். பெரிசா. பாட்டி இங்க பாரேன் என்றான். இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டு ஆ..ஹை… ஆ..ஹை… ஆ..ஹை…என்று இடுப்பை முன்னால் ஒரு தள்ளு தள்ளிக்கொண்டு குதித்துக்கொண்டு வந்தான். பாட்டி இங்க பாரேன் என்று இன்னொரு முறை செய்தான், பாட்டி பார்க்கவே இல்லை, பாட்டி இன்னைக்கு எனக்கு புடிச்ச சேனை கிழங்குதானே என்று கேட்டான். அதற்கும் பாட்டி பதில் சொல்லவே இல்லை. சாப்பிட்டு முடித்து கரண்ட் வரணுமே என்று நினைத்து கொண்டான். ஆனால் சாப்பிட்ட பிறகு அப்படியே தூங்கிப்போனான்.
சனிக்கிழமை முழுக்க கிரிக்கெட் விளையாடி விட்டு ஆறு மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வந்தான். அன்று சித்ரா பெரியம்மா, பெரியப்பா அவா பொண்ணு ரோஷனி எல்லாரும் வருவதாக இருந்தது. அம்மாவோட அக்கா இந்த பெரிம்மா. அம்மா தம்பி, மணி மாமாக்கு இன்னும் கல்யாணம் ஆகவே இல்ல. கல்யாணம்னாலே கஷ்டம்தான்னு பாட்டி சொல்லுவா. ஆனா பெரிம்மா எல்லாம் எப்பவும் சிரிசிண்டேதான் இருக்கா. பெரிப்பாக்கு எதோ ப்ரோமொஷன் வந்திருக்காம். அதப் பத்திதான் பேசிண்டே இருக்கா. பெரியப்பா பிசிக்ஸ் எல்லாம் எப்படி படிக்கறேன்னு கேக்கறார். ஆறாவது கிளாஸ்ல இருந்துதான் பிசிக்ஸ்… அடுத்த வருஷம்தான். பெரியப்பாக்கு பிசிக்ஸ் நல்லா தெரியும். நல்லா இங்கிலீஷ் பேசுவார். கேமரா வெச்சு நெறைய ஃபோட்டோ கூட எடுப்பார். ரோஷனி எப்பவும் போல அதிகம் பேசவே இல்ல. அப்பாவோட ஒட்டிண்டே அமைதிய இருந்தா. அவா கிளம்பின அப்பறம் நல்ல மழை. நல்ல இருட்டு வேற. எதிர்ல இருக்கற மைதானத்துல சோனு மழை விழுந்துண்டு இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தவளை எல்லாம் கத்தற சத்தம். இலை மேல விழும்போது படபடனு ஒரு சத்தம். தேங்கி இருக்கற தண்ணீல விழறது வேற மாதிரியான சத்தம். எப்போவாவது ஹெட் லைட் போட்டுண்டு போற கார் போகும். அப்போதான் மைதானத்துல விழற மழை கண்ணுக்குத் தெரியும். எல்லோரும் தூங்கப் போயிட்டு ரொம்ப நேரத்துக்கு அப்பறமும் இருட்டுல மழை மட்டும் கேட்டுண்டு இருந்தது. இப்படி பாட்டி கூடவே இருந்துட்டா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு நெனச்சப்போ லேசா நெஞ்சு முட்டிண்டு ஒரு அழுக வந்துது.
மறுநாள் சாயங்காலம் வீட்டிற்கு கிளம்ப தயாரானான். துணியுடன் சேர்த்து பாட்டி கொடுத்த மாதுளம்பழமும் எடுத்துக்கொண்டான். பாட்டி ஒரு தடவை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தாள். பாட்டி கிட்ட எப்பவும் இந்த விக்கோ வஜ்ராதந்தி வாசன. அவனுக்கு அப்போ அது புடிச்சு இருந்துது. மாமா அவனை பஸ் ஸ்டாண்டில் கொண்டுவிட்டுச் சென்றார். அப்போவே கொஞ்சம் இருட்டத் தொடங்கி இருந்தது.பஸ்ஸிற்கு நீண்ட நேரம் காத்திருந்தான். எதிரில் ஒரு புது ஹோட்டல் வாசலில் லைட் தோரணம் எரிந்து எரிந்து அணைந்தது. எப்பவும் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பூக்கார அம்மா இன்றும் இருந்தாள். கொஞ்ச நேரத்தில் பஸ் வந்து விட்டது.
வீட்டின் அருக போகும் போதே உள்ளே லைட் எல்லாம் அணைந்திருந்தது தெரிந்தது. அவன் ஹால் ஜன்னல் பக்கத்தில் போய் மெதுவாக “அம்மா” என்று குரல் கொடுத்தான். அம்மா ஜன்னல் அருகே வந்து “இரு இரு” என்றாள். கதவைத் திறந்து, “ஏன் இவ்ளோ லேட்? சீக்கிரம் வரதுதானே?” என்றாள். அம்மா குரலே வெளியில் வரவில்லை. காத்து மட்டும் வந்து வந்து ஒலி எழுப்பி கொண்டிருந்தது. உள்ளே அந்த அழுகிப்போன பழ வாசனை அடித்தது. அம்மா பிளாஸ்டிக்கில் மணிகளைக் கோர்த்து தோரணம் மாதிரி செய்து வைத்திருப்பாள். அது எல்லாம் அறுக்கப்பட்டு கீழே சிதறி இருந்தது. “என்ன அம்மா சண்டயா?” “அதெல்லாம் ஒன்னும் இல்ல. படு…” “இப்பவே எப்டிமா படுக்க முடியும்?”ஆனால் படுத்துதான் ஆக வேண்டும் என்பது அவனுக்கு தெரியும். எதோ பெரிசா சண்டை வந்திருக்கு. எதிரில் இருந்த பிள்ளையார் லக்ஷ்மி சரஸ்வதி படத்தை பார்த்து ஒவ்வொருவருக்காய் சுலோகம் சொல்லி வேண்டிக்கொண்டான். உள் ரூமில் ஏஏஏஏய் என்று சத்தமாக ஒரு குரல். அப்பாதான். எப்படியும் அந்த அடுக்கில் இருந்த எல்லா வீட்டிலும் அது கேட்டிருக்கும். மொத்த வீட்டில் இருந்த இருட்டிலும் அமைதியிலும் பயங்கரமாக ஒரு மிருகத்தின் கத்தல் போல கேட்டது. அவன் கால்கள் கடகட என உதறியது. போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டான். அம்மா கட்டிக்கொண்டாள். பயமா இருந்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போய் இருக்க வேண்டும். எதோ ஈரம் உணர்ந்து விசுக்கென எழுந்தான். அப்போது லைட் எரிந்து கொண்டிருந்தது. அப்பா கையில் ஒரு ஆரஞ்சு பக்கேட்டுடன் நின்று கொண்டிருந்தார். அம்மா தலையில் இருந்து உடம்பு முழுக்க தண்ணி. அம்மாவும் நடுங்கி கொண்டிருந்தாள். அம்மா முகத்தருகே வந்து ‘நக்கி முண்ட’ என்று கன்னத்தில் ஒரு அறை. பின் ‘நாற முண்ட’ என்று கொத்தாகத் தலைமுடியை பிடித்து தூக்கினார். அம்மா அடிக்குரலில் இருந்து பூனை கத்துவதை போல் கத்தினாள். மாறி மாறி கன்னத்தில் அடித்தார். அம்மா கை கூப்பியபடி நின்றாள். அவனுக்கு முட்டிக்கொண்டு வந்தது. விசும்பலுடன் ஒரு கேவல். அப்படியே அடக்கிக் கொண்டான்.
அரசியல் திறன்
ஒரு கார்பரேட்(corporate) சூழலில் எப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது நிர்வாகவியலில் என்றும் அலசப்படும் ஒரு விஷயம். இது ஒரு ஆர்வமூட்டும் கேள்வியும் கூட. நிர்வாகத்தில் வெற்றி அறிவுத்திறனால் மட்டுமே என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. இது intelligence quotient (IQ) என்ற ஒரு அளவையால் அளக்கப்பட்டது. நிர்வாகிகள் பெரும்பாலும் இந்த தகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பின் அவர்கள் தங்கள் கீழிருப்பவர்களை நிர்வாகிக்கும் போது அவர்களின் உணர்ச்சிகளும் அதனை சமாளிக்கவேண்டிய ஒரு அவசியமும் கவனத்திற்கு வந்தது. இந்த சமயத்தில் Daniel Goldman என்பவர் உணர்ச்சி திறன் (emotional intelligence ) என்ற ஒரு கருதுகோளை அறிமுகபடுத்தினார். ஒரு தனி நபரின், குழுவின் உணர்சிகளை அவதானித்து அதை முறைப்படுத்தும் திறன் அது. பிறரின் உணர்சிகளையும் அதன் பின் உள்ள காரணிகளையும் சரியாக உணர்ந்து அதற்கேற்ப செயல்படுபவனே மனிதர்களை நிர்வகிக்க திறன் உடையவன் ஆகிறான் என்பதே அதன் சாராம்சம்.
இத்தனைக்கும் பின்பும் கூட ஒரு விஷயம் ஆய்வாளர்களை குழப்பியது. அறிவு திறனும், உணர்ச்சி திறனும் அதிகம் வாய்க்க பெற்ற பலர் பின்னால் இருக்க ஒப்பீட்டளவில் இந்த திறன்கள் அதிக அளவில் அமைய பெறாத சிலர் முன்னணியில்இருந்தார்கள். இது ஏன் என்று ஆராய்ந்து பின்பு அதற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். அது மாக்கியவல்லியின் காலகட்டத்தில் இருந்தே பேசப்பட்டு வரும் அரசியல் திறன் என்பதே ஆகும். இதை political quotient(PQ) என்ற சொல்லால் குறிக்க தொடங்கினர். ஆனால் மாக்கியவல்லி விவரிப்பதை போன்ற பயமுறுத்தும், ஏமாற்றும்,நம்ப வைத்து கழுத்தறுக்கும் எதிர்நிலை அம்சங்கள் கொண்டதல்ல இது. மாறாக இது மக்களின் நம்பிக்கையும், மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலமாக ஒரு அதிகார வலையை உருவாக்குவது. இன்றைய தட்டையான கார்பரேட் அமைப்புகளில் தன ஆதிக்கத்திற்கு கீழ் வராத எந்த வித அதிகாரமும் செலுத்த முடியாதவர்களை வைத்தே ஒருவர் பல திட்டங்களை செயல் படுத்த வேண்டி இருக்கிறது. இதில் அறிவுத்திறனும் உணர்ச்சி திறனும் மட்டும் இருந்தால் போதாது..அரசியல் திறன் அதிகமும் தேவை.
இந்த திறனை எப்படி வளர்த்து கொள்வது, அதை எப்படி வரையறுப்பது என்பது குறித்து ஜோ ஓவென்(JO OWEN ) என்பவர் தனது 'வழிநடத்துவது எப்படி (How to Lead)' என்ற புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். அதிகாரத்தின் விதிகள் என்ற தலைப்பில் அதை பின்வருமாறு பட்டியல் இடுகிறார்.
1) செயல்திட்டத்தை வடிவமைப்பவராய் இருங்கள்
நீங்கள் ஈடுபடும் செயல்களில் வேறு எவருக்கும் முன்னதாகவே நீங்கள் செயல் திட்டத்தை கையில் எடுப்பது அவசியம்.
- எங்கே இருக்கிறோம்
- இறுதி இலக்கு என்ன
- அதை எப்படி அடைய போகிறோம்
என்ற மூன்றையும் உடனே வரையறுத்து விடுங்கள். இந்த முன்வரைவை நீங்கள் அளித்த பின்பு வேறு யாராவது மறுப்புகள் சொன்னாலும் அது இந்த சட்டகத்திற்கு உள்ளேயே இருக்கும். இதுவே அரசியலின் முதல் படி.
2) தொடர்புகளை உருவாக்குங்கள்
உங்கள் அதிகாரம் நீங்கள் உருவாக்கும் தொடர்புகளின் தரத்தையே சார்ந்து இருக்கிறது. நீங்கள் உங்கள் மேலாளருடைய மேலாளரிடம் தொடர்புகளை உருவாக்கி கொள்ளுதல் அவசியம். உங்களுடைய நேரடி நிர்வாகியால் உங்கள் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடிவதில்லை. அதை நீங்கள் உங்கள் தொடர்புகள் மூலமே நிரப்ப வேண்டும். உங்கள் தொடர்பு வலையை சிறுக சிறுக விரிவாக்குங்கள். உங்களை பின்பற்றுபவர்களை நீங்கள் உருவாக்கவேண்டியது அவசியம். மக்களின் முன்னேற்றத்திலும் அவர்களின் வளர்ச்சியிலும் நீங்கள் அக்கறை கொள்ளும்போது அவர்கள் உங்களுக்கு விசுவாசமானவர்களாக மாறுகிறார்கள்.
3) நடிக்க ஆரம்பியுங்கள்
நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவரை போன்று நடிக்க தொடங்குங்கள் என்பது பழமொழி. உங்கள் மேலாளருடைய பாவனையை கைகொள்ள ஆரம்பியுங்கள். உடைகள், உடல்மொழி போன்ற எல்லாம் இதில் அடங்கும். உங்கள் மேலாளருடைய பார்வையில் ஒரு பிரச்சனையை அணுகி அவருடைய மொழியில் பேச துவங்கும் போது நீங்கள் அவருக்கு இணையானவராய் கருதப்படுவீர்கள்.
4) உங்கள் மோதல்களை தேர்ந்து எடுங்கள்
எந்த ஒரு நிறுவனமும் முரண்பாடுகள் நிறைந்ததாக தான் இருக்கும். குறைவான வாய்ப்புகளுக்கு பலர் முண்டியடிக்கும் ஒரு களன் அது. இதில் தன்முனைப்பினால் வரும் மோதல்களும் சண்டைகளும் சகஜம்.. அந்த முரண்பாடுகள் உருவாக்கும் மோதல்களில் இருந்து எப்போதும் தப்பிக்க நினைக்காதீர்கள். அதை எதிர்கொள்ளுங்கள். ஆனால் வீணான சண்டைகளில் நேர விரயம் செய்வதும் உகந்ததல்ல. இந்த மூன்று விதிகளை நினைவில் வைத்திருப்பது உதவும்.
- சில்லறை லாபங்களுக்காக ஒரு போதும் மோதலில் இறங்க வேண்டாம்.
- நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே கோதாவில் இறங்குங்கள்.
- வேறு எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டுவிட்டால் மட்டுமே மோதலில் ஈடுபடுங்கள்.
5) கொஞ்சம் பைத்தியகாரனாய் இருங்கள் .
எப்போதும் அறிவிற்கும்/நடைமுறைக்கும் பொருந்தி வருகிறது போன்ற செயல்திட்டங்களை மட்டும் வைத்து கொள்ளாதீர்கள். கனவு காண்பவராக இருங்கள்.ஒரு நடைமுறை நிர்வாகியால் மைக்ரோசாப்ட்-ஐயோ ஜெனரல் மோட்டர்சையோ எதிர்கொள்ள முடிந்திருக்காது. ஆப்பிள்-யும் டோயோடாவையும் உருவாக்கி அளித்தது இந்த 'பைத்திய கார' நிர்வாகிகளே. உங்கள் கீழ் இருப்பவரிடம் இருந்து அளவுக்கு அதிகமாய் எதிர்பாருங்கள். அப்போது அவர்களின் சாத்தியங்களின் எல்லைகள் அதிகரிக்கப்படுகின்றன. அது உங்கள் நிறுவனத்தின் சாத்தியங்களை அதிகரிப்பதே.
6) அதிகாரத்தை தேடி செல்லுங்கள்
பணம் வேண்டுபவர்கள் பணத்தை தேடி செல்வது போல, புகழ் வேண்டுபவர்கள் புகழை தேடி செல்வது போல, அதிகாரம் வேண்டுபவர்கள் அதிகாரத்தை தேடி செல்லுங்கள். எந்த ஒரு அமைப்பிலும் ஒரு அதிகார மையம் ஒன்று இருக்கும். அத்துடன் இயைந்து கொள்வது மூலமே ஒருவரால் அதிகார படிகளை ஏற முடியும். இந்த மையத்துடன் ஒன்றாமல் தனித்து வேலை செய்து கொண்டிருப்பதன் மூலமாக உங்களுக்கு ஒரு பிரச்சனைகள் அற்ற ஒரு சூழல் அமையலாம். ஆனால் அதில் முன்னேற்றங்களும் இல்லை என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
7) தெளிவின்மைக்கு தயாராய் இருங்கள்
ஒரு அமைப்பில் தெளிவின்மைகளும் நெருக்கடிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். தெளிவான பாதைகள் பெரும்பாலும் இருப்பதே இல்லை. அரசியல் திறன் மிக்க ஒருவன் இந்த தெளிவற்ற சூழலை தன்வச படுத்தி கொண்டு தலைமை ஏற்று செயல்திட்டத்தை வழி நடத்துகிறான். முக்கியமான செயல்திட்டத்தை அவன் கைகொண்ட பிறகு மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் சின்ன பொறுப்புகளுக்கு பிறர் முண்டியடிக்கும் நிலைமைக்கு தள்ள படுவார்கள்.
8) இறுதி இலக்குகளில் கருத்தாய் இருங்கள்
இலக்குகளில் கவனமாய் இருப்பது என்பது எல்லோரும் அறிந்த, முனைந்து சொல்லுவதற்கும் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றும். ஆனால் பல நிர்வாகிகள் செயல்முறை சிக்கல்களில் கவனம் கொடுத்து இறுதி இலக்கை தவற விட்டு விடுகின்றனர். நிர்வாகம் எப்போதுமே அலசி ஆராய்ந்து சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களையும் செயலை முன்னேடுப்பவர்களையும் எளிதாக தரம் பிரித்து கண்டு கொள்கிறது. இரண்டாமவருக்கே முன்னேற வாய்ப்புகள் உண்டு.
9) பயன்படுத்தாதை இழந்து விடுவீர்கள்
நீங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை உபயோகிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் நீங்கள் மேலும் அதிகாரத்தை ஈட்டுவீர்கள். அதிகாரம் மேலும் மேலும் அதிகாரத்தை ஈர்க்கும்.அதிகாரத்திற்கான ஒரு காலியிடத்தை எப்போதும் விட்டு வைக்காதீர்கள். உங்களால் முடியாவிட்டால் அது வேறொருவரால் நிரப்பப்படும்.
மேற்சொன்னவை அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சிதிறனின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவது அல்ல. ஆனால் இவற்றுடன் அரசியல் திறனும் சேரும்போது மட்டுமே ஒருவன் அமைப்பின் ஏணிப்படிகளில் விரைவாக ஏறுகிறான். மேலும் அதிகாரம் சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகத்தாலும் அடையபெறுவது அல்ல, மாறாக நம்பிக்கையும், மதிப்பும் நிறைந்த தொடர்புகளை உருவாக்கி கொள்வதிலும் இலக்குகளைஅடைவதில் உள்ள ஒருவரது திறனிலும் அது ஒளிந்திருக்கிறது என்பதை இது சுட்டுகிறது.