பெயரில் என்ன இருக்கிறது? A Rose is a Rose is a Rose என்றானே ஒரு பெரும் கவிஞன். யாரவன்? சரி நினைவுக்கு வரவில்லை. அது போல ரோஜாவை எந்த பேரில் அழைத்தாலும் அதன் அழகோ மணமோ குறைவு படவா போகிறது என்கிறீர்கள். இந்த தத்துவம் எல்லாம் சரிதான். அதற்காக நம் குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து விட முடியுமா என்ன? இப்படி நினைத்து தான் என் குழந்தையின் பேர் தேடும் படலத்தை துவங்கினேன். அது எத்தனை பெரிய ஒரு காரியம் என்று அது தொடங்கிய பின் தான் எங்களுக்கு புரிந்தது.
சாரதா கருவாகி மூன்று மாதத்திற்கு பின் ஒரு இனிய நாளில் பெயர்களை இப்போதே தேர்வு செய்து வைத்தால் என்ன என்று எங்களுக்கு தோன்றியது. எப்படிப்பட்ட பெயர் வேண்டும் என்பதில் நான் இரண்டு விதிகள் வைத்திருந்தேன்.
அ) கூப்பிட இலகுவாக இருக்க வேண்டும்.
ஆ) அ-வில் தொடங்க கூடாது.
இரண்டாவது நிபந்தனையின் காரணம் என் சொந்த அனுபவம் தான். அரவிந்த் என்ற பெயரை வைத்து கொண்டு நான் பட்டது கொஞ்ச நஞ்சமல்ல. பள்ளியில் இருந்தே எதற்கு ஆள் எடுத்தாலும் அகர வரிசைப்படி என் பெயர் தான் முதலில் வந்து நிற்கும். இது பெஞ்ச் தூக்குவதற்கும் , வேறு ஏதேனும் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு பலி ஆடு தேடி மட்டும் தான். மற்றபடி போட்டிகளில் கலந்து கொள்ளுதல், பரிசு வாங்குதல் போன்றவற்றிற்கு வேறு அளவுகோல்கள் இருந்தன. மேலும் பரீட்சை எழுதும் பொது நான் எப்போதுமே முதல் வரிசை முதல் நாற்காலி தான். இதில் உள்ள அசௌகரியம் நீங்கள் அறியாதது அல்ல,
வாய்ல வர மாதிரி பேர்னா வாழைப்பழம்னு வெக்கலாமா-ங்கற முதல் கட்ட மொக்கைகளை தாண்டி இது குறித்து பேச தொடங்கிய போது தான் புரிந்தது நல்ல பெயர் என்பதன் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வேறுபடும் என்று.
"நம்ம குடும்பத்துல பிள்ளைகளுக்கு தாத்தா பெயரோ அல்லது பாட்டி பெயரையோ வைப்பது தான் வழக்கம். அது படி பார்த்தால் பொண்ணு பிறந்தால் முத்து லட்சுமி என்றோ பையன் பிறந்தால் பிச்சுமணி என்றோ தான் வைக்க வேண்டும்" என்றார் என் அம்மா. அப்புறம் நாம கூப்பிடறது எப்டி வேணா கூப்பிடலாம் என்றும் சேர்த்து கொண்டார். பிச்சுமணி, முத்துலட்சுமி போன்ற பெயர்களுடன் என் குழந்தைகள் கான்வென்ட் பள்ளியில் சக மாணவரிடையே பட போகும் கொடுமையை எண்ணி திடுக்குற்றேன்.
"உங்க அம்மா எல்லாம் அந்த காலத்து ஆளுங்க. அவங்க பேச்ச விடுங்க. நமக்கு என்ன புடிச்சிருக்கு அது தான் இங்க முக்கியம்" என்று ஊதினாள் மனைவி. நம்ம போன தடவ உங்க ஆபிஸ் தீபாவளி பங்க்ஷன் போய் இருந்தோமே, அதுல முதல் பரிசு வாங்கின பையன் பேரு த்ருவ். நல்லா இருக்கு இல்ல. எதோ ரிஷியோட பெயராம். நமக்கு பையன் பிறந்தால் இந்த பெயரையே வைக்கலாமே.
"மச்சான் த்ருவ் நல்லா தான் இருக்கு" என்று ஆரம்பித்தான் என் பால்ய கால நண்பன் சிவகுமார்."ஆனா அவசரத்துல எப்படி கூப்பிடுவேன்னு யோசிச்சு பாத்தியா. உனக்கே நாளைக்கு உன் பையன் மேல கோவம் வந்துச்சுன்னு வெச்சுக்கோ,செந்தில், ரமேஷ், சுரேஷ்னா நல்ல சவுண்டா கத்தி கூப்பிடலாம். ஆனா த்ருவ் எல்லாம் அவ்ளோ சுளுவா வாய்ல வராதுடா. நீ வேற லண்டன்-ல எல்லாம் இருந்த ஆளு. சும்மாவே நம்ம பெயர அவனுங்க எப்படி டார்ச்சர் பண்ணுவாங்கனு உனக்கு தெரியும்". அதுவும் சரி தான். ராமசுப்ரமணியன் என்ற எனது கடைசி பெயர் ராமசுப்ர சனியன் என்றெல்லாம் கொடுமை படுத்த பட்டது நினைவுக்கு வந்தது.
பின்பு ஆதித்த கரிகாலன், செங்குட்டுவன்,அதியமான் போன்ற தமிழ் பெயர்கள் எல்லாம் யோசித்து பார்த்தேன். இவை யாவுமே மனைவியால் நிராகரிக்க பட்டது. கொஞ்சமாவது மாடர்னாக இருக்க வேண்டும் என்பது மனைவியின் நிபந்தனை. இந்த மாடர்ன் என்பது பிடிபட ரொம்ப நாள் ஆயிற்று. கொஞ்சம் ஷா, க்ஷ, ஒலியமைப்புகள் கொண்ட பெயர்கள் எல்லாம் நவீனமாக கருதப்பட்டன. வட இந்திய நடிகர்களின் பெயர் சாயலில் இருந்தால் இன்னும் உத்தமம். என்னுடன் வேலைபார்த்த திருநெல்வேலியை சேர்ந்த என் நண்பனொருவன் அவன் பையனுக்கு ஹ்ரிதிக் என்று பெயரிட்டதை என்னால் ரொம்ப நாட்களுக்கு தாங்கி கொள்ளவே முடியவில்லை. "நம்ம கொழந்த நாளைக்கு ஜீன்சும் ,ப்லேசரும், கூலர்சுமாக, நாலு எடத்துல போக வேண்டி varum. அங்க பஞ்சாபகேசன் மாதிரி உங்க பஞ்சாங்க பெயர் எல்லாமா வெச்சிட்டு நிப்பான்?" என்றார் மனைவி. யோசித்து பார்த்ததில் எனக்கும் அது ஏறக்குறைய சரியாக தான் தோன்றியது.
பின்பு நாங்கள் இரு நோட்டு புத்தகங்கள் எடுத்தோம். ஆண் பிள்ளை பெயர்களுக்கு ஒன்று. பெண் பெயர்களுக்கு இன்னொன்று. அப்போது தான் பெயர்களின் ஒரு பெரிய களஞ்சியம் எங்கள் கண்ணில் பட்டன. பார்க்கும்,கேட்கும் ஒவ்வொன்றிலும் பெயர்களை மட்டும் வடிகட்டி விடும் மனது. "இன்னிக்கு ஆபிஸ்ல சகானா இல்ல என்று தொடங்கும் போதே , சகானா என்று குறித்து கொள்வார் என் மனைவி. ராமசாமி,பழனிசாமி,ரோஹித்,காயத்ரி,கனகா,மணிசங்கர்,அமித்,அசோக்,முகுந்த் என்று எத்தனை எத்தனை பெயர்கள். ஒரு பெயரை குழந்தை மேல் திணிப்பது கூட ஒரு வன்முறையாக தான் தோன்றியது. பிடிக்கிறதோ இல்லையோ அந்த பெயரை எஞ்சிய வாழ் நாள் முழுதும் அது சுமந்து கொண்டிருக்க வேண்டும்.
இந்த சமயத்தில் தான் பெங்கலூரிலிருந்த என் அக்காவும் கருவுற்றிருந்தாள். எத்தனையோ வருடங்களாக குழந்தை இல்லாமல் இப்போது தான் நடந்திருக்கிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் இரட்டிப்பு சந்தோசம். அக்காவுக்கு மூன்று மாதம் ஆகும் போதே இங்கு அம்மாவுடனும் எங்களுடனும் இருக்க வந்து விட்டார். மாமா பெங்களூரில் பிசினெஸ் செய்து வந்தார். எப்போவாவது தான் இங்கு எல்லாம் வந்து செல்வார். எந்நேரமும் வேலையில் தான் நினைப்பு என்று அக்கா குறைபட்டு கொள்ளாத நாளே இல்லை.
அக்கா வந்த சில மாதங்களில் சாரதா ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். நாங்கள் முன் நாட்களில் எழுதி வைத்திருந்த பெயர் புத்தகத்தை எடுத்து அலசி ஆராய்ந்து சித்தார்த் என்ற பெயரை முடிவு செய்து வைத்திருந்தோம். யாரிடமும் சொல்லவில்லை. பெயர் சூட்டும் அன்று எல்லோருக்கும் எதிர்பாராமல் இருக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.
பதினொன்றாம் நாள் பெயர் சூட்டு விழா ஏற்பாடாகி இருந்தது. சில உறவினர்கள் முன் தினமே வீட்டிற்கு வந்திருந்தனர். பேச்சும் கும்மாளமுமாய் வீடே அமர்க்களப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அக்கா மட்டும் யாரிடமும் பேசாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள். முகம் பொலிவிழந்து இருந்தது. "என்ன ஆச்சுக்கா" என்றேன். அவள் எதுவும் சொல்லவில்லை. கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. "என்ன ஆச்சு இப்போ நீ சொல்லித்தான் ஆகணும்". இல்ல அம்மா அப்பா எல்லோரையும் கூப்பிட்டு பெரிய ரகளை பண்ணுவேன்" என்றேன். அதற்கு பின் தான் சொன்னாள். மாமாவும் அவர் நண்பரும் பெரும் முதலீட்டில் ஒரு வியாபாரம் செய்து வந்தார்கள். கூட இருந்த அந்த நண்பன் இவரை முற்றிலுமாக ஏமாற்றி இருக்கிறான். பெரும் பணத்தை எடுத்து கொண்டு குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான். "பத்து லட்சம் மேல போச்சுடா. இப்போ என்ன பண்றது?" என்று சொல்லும் போதே அக்கா குரல் உடைந்து குலுங்கி அழுதாள்.
அவளை சமாதான படுத்தி கொஞ்சம் பணம் நான் கடனாக தருவதாக வாக்களித்து விட்டு அவளை தூங்க அனுப்புவதற்குள் இரவு வெகு நேரம் ஆகி விட்டது. மறு நாள் காலை வேறு சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டும்.
பெயர் சூட்டும் நாள் அன்று சீக்கிரமே எழுந்து விட்டேன். குளித்து, தயார் ஆகி ,பின் காலை ஏழு மணியில் இருந்தே வீடு பரபரக்க துவங்கி விட்டது. புரோகிதர் முதலில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை முடித்து விட்டு பின் பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லவேண்டும். முதற்கட்ட பூஜைகளை முடிக்கவே மணி பதினொன்றாகி விட்டது. இப்போது நாமகரணம் சூட்டும் பகுதி. சித்தார்த் என்று என் மனைவியிடம் ஒரு முறை சொன்னேன். அவளும் ஆமோதித்து ஒரு புன்னகை. "குழந்தை பெயர் என்ன சொல்லுங்கோ" என்றார் புரோகிதர். எனக்கு சடார் என்று ஒரு பொறி தட்டியது. "ஒரு நிமிஷம்" என்றபடி அக்காவை கூப்பிட்டேன்.தனியே அழைத்து போய் "அக்கா உன் கிட்ட ஒண்ணு கேக்கணும், நம்ம மாமவ ஏமாற்றினானே அவரோட பிரண்டு அவன் பேர் என்ன"
"அத கேட்கற நேரமா இப்போ முதல்ல போய் பூஜைய முடிச்சிட்டு வா." "இல்ல நீ சொல்லு, அவன் பெயர் என்ன". "எதுக்குடா" "இல்ல சொல்லு". "சித்தார்த்ங்கற ஒரு படுபாவி" என்றாள் அக்கா.
No comments:
Post a Comment