சமீபத்தில் Leo Babuata எனபவரின் zenhabits.net என்ற வலைத்தளம் காண நேர்ந்தது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆறு இலக்க சம்பளம் பெற்று வந்தவர். பின் ஒரு நாள் அதை உதறிவிட்டு புனைவு எழுத்தாளராகும் தன கனவை பின் தொடர்ந்து வருகிறார். இது வரை அவர் புனைவில் எதுவும் எழுதியதாக தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஒருவர் தன் இயல்பிற்கான வேலையே தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை தன் வலைதளத்தில் வலியுறுத்தி வருகிறார். இவரது எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்தது கவனம் குவிதல் குறித்து இவர் எழுதியவைகளும் மற்றும் எப்படி குறைந்த பட்ச தேவைகளுடன் ஒருவர் வாழ முடியும் என்பது குறித்து எழுதுபவையும். உதாரணமாக அவர் வீட்டில் இணைய வசதியே அவர் செய்து கொள்ளவில்லை. இணையத்தில் நேரம் வெட்டி அரட்டைகளில் செலவிடப்பட்டு செயல்திறன் குறைகிறது என்கிறார். ஒருவரது அத்தியாவசிய இணைய தேவை உண்மையில் ஒரு நாளில் அரை மணிக்கும் குறைவாகவே. இதை ஒருவர் இணைய கபேகளில் சென்று நிறைவேற்றி கொள்ள முடியும் என்கிறார். இதனால் நேரம் நம் கட்டுபாட்டில் இருப்பதுடன் வீண் செலவும் குறைகிறது.
இது போன்ற பல அவதானிப்புகள். இவரது வலைத்தளம் டைம் பத்திரிகையின் முதல் ஐந்து வலைத்தளங்களில் 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் இடம்பிடித்துள்ளது. இவர் பல வருடங்களாக எழுதி வருகிறார்.சில குறிப்பிட்ட விஷயங்களை பற்றி திரும்ப திரும்ப பேசுவது சில சமயங்களில் அலுப்பு வராமல் இல்லை. மேலும் சில இடங்களில் ஏற்கனவே பல பேர் பேசி புளித்து போன தன்னம்பிக்கை வளர்த்தல், நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுதல் போன்றவற்றை பேசுவதையும் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment